Tuesday, June 7, 2011

தவறான பாதையில் இலங்கை

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி. இலங்கையின் அரசியல் நிலை தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் அவர் எழுதிய ஆய்வு இது. இன்றைய அரசு ஒரு பயங்கரவாத அமைப்புப் போன்றே செயற்படுகின்றது என்று குற்றஞ்சாட்டுகிறார் அவர். அவரது கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்படுகின்றது.

இலங்கையின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது ஏ9 நெடுஞ்சாலை. அதில் படையினரின் கடைசி சோதனைச் சாவடியைத் தாண்டியதும், தமது கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்குவதற்காக விடுதலைப் புலிகள் ஆவணங்களைச் சோதிக்கும் அலுவலகத்தை அடைந்தோம்.
இது 2002இல் நடந்தது. அன்று அந்தப் பகுதிக்குள் காலடி எடுத்து வைத்த எவருமே இரண்டு நாடுகளுக்கு இடையில் தாம் பயணிப்பதாகவே உணர்ந்தனர். இலங்கையில் உள்ள பலருக்கும் ஜனநாயகம் பழக்கமானதுதான். பன்மைத்துவ ஊடகங்கள், உரிமைப் பிரச்சினைகள் குறித்த நடவடிக்கையாளர்களின் விவாதங்கள், பல அரசியல் கருத்தியல்களுடன் கூடிய மக்கள், பொருளாதார வாய்ப்புக்கள் தொடர்பான விவாதம் என்பன ஒரு நாட்டினை நிதானத்துடன் பேணக்கூடிய சிறப்பான அம்சங்களாகும். ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாகத் தொடர்ந்த போரால் இலங்கையில் அவை அனைத்தும் இழக்கப்பட்டன என்றே தோன்றுகிறது.

வன்னி அரசியல் புலிகள் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடினார்கள் என்று சொல்லப்பட்டாலும், அதற்கு முரணான வகையில் சுதந்திர தமிழீழம் என்பது பயமுறுத்தும் வகையிலானதாக இருந்தது. தலைவர் பிரபாகரனின் உருவப் படங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தன. அவருடைய படையினர் எங்கும் இருந்தனர்; அதுபோலவே தகவல் சொல்லிகளும் எல்லா இடங்களிலும் பரந்திருந்தனர். சுகாதாரம், உணவு, வாழ்வாதாரம், கல்வி என்று அனைத்தையும் கையாள்வதற்கான ஏகபோக உரிமை புலிகளிடம் மட்டுமே இருந்தது. புலிகளின் பெருமைகளைப் பாடுவதற்கான ஒரே அலைவரிசையிலேயே ஊடகங்கள் இயங்கிக் கொண்டிருந்தன.

இவை தொடர்பில் கிராமவாசிகள் இரகசியமாகவே முறையிட்டார்கள். இதனால் எம்மால் எதுவும் செய்ய முடியவில்லை, நாம் தனித்து மூலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். எனவே முறைப்பாட்டாளர்களால் வெளிப்படையாக எதனையும் கூறமுடியவில்லை.

அங்கு சுதந்திரமான பயணத்துக்கு இடமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து எவரும் தனது உறவினரைப் பிணை வைக்காமல் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கிராமவாசிகள் எம்மிடம் சொன்னார்கள். தமது பிள்ளைகள் பதின்ம வயதுக்குள் காலடி வைத்ததும் பெற்றோர்கள் துக்கம் அனுஷ்டிக்க ஆரம்பித்தார்கள். ஏனெனில் விரைவிலேயே பிள்ளைகள் போருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள். இப்படித் தமது அன்புக்குரியவர்களில் பலரை பெரும் எண்ணிக்கையிலானோர் இழந்திருக்கின்றனர். எவரும் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு அங்கு இடமிருக்கவில்லை.
பிரபாகரன் வன்னியில் செய்தியாளர் மாநாடு நடத்தியபோது நாம் அங்கிருந்தோம். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக தான் இருந்தது குறித்து அவர் சிறிதளவே வருத்தப்பட்டார் என்று தோன்றியது.

மனித உரிமைகள் தொடர்பிலான முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற விடயதை ஏற்க அவர் தயாராக இருக்கவில்லை. போர் நடப்பதே இவற்றுக் கான காரணம் என்று சாதாரணமாகச் சொல்லி எம்மைத் திருப்திப்படுத்தவே அவர் முயன்றார். அந்தச் சமயத்தில் பெரும்பாலோர் அவர் வெற்றிபெற்றுவிடுவார் என்றே எண்ணினர். அவரால் ஆயுதங்களையும் பணத்தையும் தாராளமாகப் பெறமுடிந்தது. நண்பர்கள் பலரும் அவருக்கு இருந்தனர் என்றே அப்போது தோன்றியது.

தலைகீழான நிலைமை

இருப்பினும் 2009 மே மாதத்தில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இலங்கை இராணு வத் தின் மூர்க்கத்தமான தாக்குதலில் பிரபாகரனும் அவரது மூத்த தளபதிகளும் இறந்து போனார்கள். இந்த இரத்தக் களரியான போர் முடிவதற்கு மூன்று வருடங்களுக்கும் கொஞ்சம் அதிகமான காலம் அதற் குத் தேவைப்பட்டது. இதனை அடுத்து இலங்கைக்கு அமைதியும் சுபீட்டசமும் மிக்க எதிர்காலம் ஒன்று இருப்பதாக பெரும்பாலான இலங்கையர்கள் எதிர்பார்த்தார்கள். அதாவது இதுவரை தெற்கில் இருந்துவந்த சுதந்திரம் வடக்கிலும் இனி வீசும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிக மோசமானது என்னவென்றால் இலங்கை தவறான பாதையில் வழிநடத்தப்படுகின்றது என்ற உண்மைதான்.

மஹிந்த மற்றொரு பிரபா

பிரபாகரன் தனது போரில் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால், எதேச்சதிகாரப் போக்கு, தனி மனித ஆளுமையை முதன்மைப்படுத்திய அரசியல் (முகஸ்துதி அரசியல்), ஒருதலைப்பட்சமான ஆவேசமான சுய விளம்பரம், குற்றங்களுக்குப் பொறுப்புச் சொல்வதற்கு மறுப்பது போன்ற பிரபாகரனின் கலாசாரமே இலங்கையில் இப்போது மேலோங்கி வருகிறது.

மஹிந்த ராஜபக்ஷ அலை மக்கள் மத்தியில் பெருமளவில் காணப்படுகிறது. பிரபாகரனது உலகில் பத்தியாளர்களின் விதி என்னவோ அதுவே இன்றைய இலங் கையில் பத்திரிகையாளர்களுக்கும் விமர்சகர்களுக் குமான விதி. கைது, சித்திரவதை, கொலை, காணாமல் போதல் என்பன இந்த உலகில் சாதார ணம். பிரபாகரனின் பயங்கரக் கனவிலிருந்து இலங்கை என்ற நாட்டை வேறுபடுத்தக்கூடிய நீதிமன்றங்கள், சுதந்திரமான சிவில் சமூகம் மற்றும் ஆக்கபூர் வமான எதிர்க்கட்சிகள் என்று அனைத்துமே கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றன.

மாற்றுக் குரல்கள் இப்போது அமைதியாகிவிட்டன. அதனால் மக்கள் தமது முறைப்பாடுகளை இரகசியமாகவே மேற்கொள்கி றார்கள். ஒரேயொரு விடயத்தை மட்டுமே பாடுபொருளாகக் கொள் ளுமாறு ஊடகங்கள் அனைத்தும் ஊக்கப்படுத்தப்படுகின்றன. அரசின் பெருமைகளைக் கொண்டாடுவது என்பதே அந்தப்பாடு பொருள். 2009 போரின் இறுதிக் கட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் எந்தவொரு மனித உரிமை மீறல் பற்றி எவரொருவர் பேசினாலும் அது எதிரியின் பரப்புரை என்று கூறி நிராகரிக்கப்படுகிறது. இந்த நிலைப்பாட்டில் தாம் வெல்ல முடியும் என்றும் இலங்கை அரசு நம்புகின்றது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதர், "எமக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்'' என்று அதனால்தான் பிரகடனப்படுத்தினார்.

போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற சண்டையில் புரியப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் கள்தான் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் இதயம். போரின் போது புலிகளும் பல மீறல்களுக்குக் காரணமாக இருந்தார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியப்படும் விடயமல்ல. இராணுவத்தின் தாக்குதல்களுக்கு எதிராக அவர்கள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள். தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து தப்பிச் செல்ல முயன்றவர்களைச் சுட்டுக் கொன்றார்கள். பொதுமக்கள் கூடியிருந்த இடங்களுக்கு அருகே ஆட்லறி எறிகணைகளை நிலைப்படுத்தினார்கள், சிறுவர்களைக் கட்டாயப்படுத்திப் போராளிகளாக்கினார்கள், பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினார்கள்.

ஆனால், அரச படையினரும் இதற்கு நிகராக அல்லது மேலான அட்டூழியங்களில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ் சாட்டப்படுகிறது. வைத்தியசாலைகள் மீது பகுத்தறிவற்றதனமாகப் பரவலான ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போர் வலயத்துக்குள் சிக்கிக் கொண்ட பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வேண்டு மென்றே திட்டமிட்டுத் தடுத்துள்ளனர்.

2009 மே மாதத்தில் பேர் முடிவடைந்தபோது, மிக மோசமான நிலையில் இருந்த தடுப்பு முகாம்களில் 3 லட்சம் பொதுமக்களை அரசு காவலில் வைத்திருந்தது. அரச படையினரால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர் பின்னர் காணாமல் போயுள்ளனர். அத்தோடு தமது தடுப்புக் கைதிகளில் பலருக்கு அரச படையினர் மரணதண்டனை விதிக்கும் வீடியோ ஆதாரங்களும் உள்ளன. அவர்களில் சிலர் சண்டையில் கொல்லப்பட்டார்கள் என்று அரச படையினர் அறிவித்தவர்கள்.

நிபுணர் குழு அறிக்கை

ஐ.நா. பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அறிக்கை அரச படையினரின் அட்டூழியங்களை உறுதிப்படுத்துகிறது. போர்க் குற்றங்களுக்காக இரு தரப்பினரையும் அந்த அறிக்கை சாடு கிறது. நீதியை நிலைநாட்டவும் பொறுப்புக்கூறவும் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று அவசியம் என்று அது வலியுறுத்துகிறது. நிபுணர் குழுவின் அந்த அறிக்கை, அரசு மற்றும் புலிகள் பொதுமக்களின் உரிமைகள், நலன்கள், உயிர் என்பவற்றைப் பாதுகாப்பதற்குத் தவறி இருக் கின்றனர். அதன் மூலம் அனைத்துலகச் சட்டதிட்டங்களை மீறியிருக்கின்றன என்று கூறுகின்றது.

சண்டை நடந்த இடங்களுக்கு சுயாதீனத் தரப்புக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவரும் நிலையில், போரில் உண்மையில் எத்தனைபேர் இறந்தார்கள் என்று அறிந்துகொள்வது மிகக் கடி னம். அதேவேளை, இறந்தவர்கள் எண்ணிக்கை பல ஆயிரங்களாக இருக்கும் என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை கூறுகின்றது. "பல தரப்புக்களின் தரவுகளின்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயி ரத்தை எட்டக்கூடும் என்பதை நிராகரிக்க முடியாது'' என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, அனைத்துலக ரீதியில் அங்கீ கரிக்கப்பட்ட மூன்று நிபுணர்களால் கவனமாகவும் தொழில் நேர்த்தியுடனும் விடயங்கள் அலசி ஆரா யப்பட்ட பின்னர் தயாரிக்கப்பட்டது. இது நிச்சயம் தீவிரமான கவனத்துக்கு எடுக்கப்படவேண்டும். ஆனால் இலங்கை அரசோ, இந்த அறிக்கையை "பக்கச்சார்பானது'', "சட்டவிரோதமானது'',அடிப்படையில் ஆதாரங்கள் அற்றது என்று தெரிவிக்கிறது. இராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள் ளார். அத்துடன் நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப் படையில் ஐ.நா. நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என்ற அழுத்தங்களையும் திரட்டி வருகிறது அரசு.

குற்றச்சாட்டுக்களை எல்லாம் மூடிமறைப்பதற்கு அவர்கள் ஒரு போர்வையைப் பயன்படுத் துகிறார்கள். அதுதான் "எந்த ஒரு பொதுமகனுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது'' என்ற கொள்கையுடன் கூடிய "மனிதாபிமான மீட்பு நடவடிக்கை'' என்கிற அரசின் கோஷம்.

எதிர்ப்பும் நிராகரிப்பும்
அரச படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட இலங்கையின் உயர் மட்டத்தினர் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர். ஒருபடி மேலே போய், எதிர்கால தேசிய நல்லிணக்கத்துக்கு ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை ஆபத்தாக அமையும் என்று எச்சரித்திருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறை என்ற பெயரில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை கடந்த ஆண்டு அரசு நியமித்தது. ஆனால் இந்த ஆணைக்குழுவில் "ஆழ மான குறைகள்'' இருப்பதாக நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆணைக் குழு சர்வதேச தரத்துக்கு இருக்காது என் றும் பொறுப்புக்கூறுதலைச் சரிவர நிறைவேற் றாது என்றும்கூட அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட இத்தகைய ஆணைக்குழுக்கள் நீதியை நிலைநாட்டுவதற்குத் தவறி இருந்தன. 2008ஆம் ஆண்டில் இத்தகைய ஓர் ஆணைக்குழுவின் விசாரணையைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்ட அனைத்துலக நிபுணர்கள் அடங்கிய குழு, விசாரணையில் காணப்பட்ட திருப்தியின்மை காரணமாக அதிலிருந்து வெளியேறி இருந்தது. "வெளிப்படைத்தன்மையே இல்லாமல் விசா ரணை நடக்கிறது. விசாரணை மற்றும் புலனாய் வுக்கு அடிப்படையான அனைத்துலகத் தரம், சட்ட திட்டங்கள் பேணப்படவில்லை'' என்று அந்த நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

அதே தவறுகள்
இந்த 26 ஆண்டுகாலப் போரில் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி கொள்வதற்கு முடிந்த முக்கிய காரணங்களில் ஒன்று, அந்த அமைப்புத் தனது நண்பர்களை இழந்தமை. இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் உரிமை கள் விடயத்தில் ஆதரவானவர்கள்கூட, புலிகளின் மனித உரிமை மீறல்களால் குறிப்பாகச் சிறுவர் களைப் படைகளில் சேர்த்துக் கொண்டமை மற் றும் தமிழ் மக்களிடம் இருந்து பலவந்தமாகக் கப்பம் பெற்றமை போன்றவற்றால் வெறுத்துப் போனார் கள். அதன் விளைவு, பல நாடுகளில் புலிகள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டார்கள். இது நிதியைப் பெறுவதையும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெறுவதையும் பாதித்தது.
மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட் டுக்களில் இருந்து தன்னைக் காப்பதற்கு தனது "நண்பர்கள்'' தனக்கு அரணாக இருப்பார்கள் என்று இப்போது இலங்கை அரசும் கூறிவருகிறது. போர் இடம்பெற்று வந்த சமயத்தில் மனித உரி மைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதும் அனைத்துலக சமூகத்தின் பெரும் பகுதி இலங்கைக்கு ஆதரவாகவே இருந்தது. அதனால் இலங்கையின் நண்பர்களுக்கு போர்க் குற்றங்கள் தொடர்பில் நேர்மையான நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் நாடுகளுடன் அவர்கள் சேர்ந்து கொள்வதோ, போர்க்குற்றங்கள் பற்றி வெளிப்படையாகப் பேசுவதோ சிக்கலானதுதான். இருப்பினும் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் இது விடயத்தில் பேச வேண்டியது அவசி யம். இந்த நாடுகள் இலங்கையின் நம்பிக்கைக் குரியவை. போருக்குப் பின்னரான மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆதரவளித்து வருகின்றன. அதனா லேயே அவை வெளிப்படையாகப் பேசவேண்டி இருக்கின்றது. ஆனால், போர்க் குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று சீனா வும் ரஷ்யாவும் நினைக்கின்றன. இலங்கையை வெளிப்படையாக விமர்சிப்பதிலும் பார்க்க அதன் மீதுள்ள தமது செல்வாக்கைப் பயன்படுத்த முடியும் என்று இந்தியாவும் ஜப்பானும் வாதிடுகின்றன.

இந்தியா திருந்த வேண்டும்
இலங்கை அரசு தனது குடிமக்களுக்கு எதிராக நிகழ்த்திய கொடூரங்கள் தொடர்பில் மட்டும் இந்தியா மௌனமாக இருக்கவில்லை. இலங்கை மீது அனைத்துலகக் கண்காணிப்பும் அழுத்தங்க ளும் விழுவதில் இருந்தும் அதனை வினைத்திறனுடன் கடந்த காலங்களில் பாதுகாத்திருக்கிறது. போர் முடிந்து சிறிது காலத்தில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதர வளித்தது. இதனால் இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிக் கப்பட்டது.

இலங்கையில் அமைதியைக் கொண்டுவருவதற்காக இந்தியா ஏற்கனவே அதிக விலை கொடுத்துள்ளது. 1980களில் இலங்கையில் அமைதிப் பணியில் ஈடுபட்ட 1,000 படையினரின் உயிர்களை இந்தியா இழந்துள்ளது. ராஜீவ் காந்தியைப் புலிகள் படு கொலை செய்தார்கள்.

இப்போது, இலங்கையில் போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை ஊக்குவிக்கக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் பக்கம் இருப்பதற்குப் பதிலாக, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்த விரும்பும் அரசுகளுடன் இணைந்து இந்தியா இப்போது நிச்சயம் பணியாற்ற வேண்டும்.

இந்த விடயத்தில் இந்தியா மீண்டும் பின்தங்கக் கூடாது. இந்தவேளையில் வெளிப்படையாகப் பேசுவதன் மூலமே, இலங்கையிலுள்ள சகல இன மக்களும் அமைதிமிக்க ஜனநாயக எதிர்காலத்தைப் பெறுவதை இந்தியாவால் உறுதிப்படுத்த முடியும்.

Wednesday, May 25, 2011

அதிகாரப் பகிர்வு எட்டாக் கனியே

நிபுணர் குழுவின் போர்க் குற்றங்களின் அடிப்படையில் இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் ஏன் அவசியம் என்பது தொடர்பாக விளக்குகிறார், சிங்களப் பத்தி எழுத்தாளரும் அரச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் காரணமாக தற்போது மேற்கு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பவருமான சுனந்த தேசப்பிரிய. ராவய பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள அந்த விமர்சனப்பத்தியின் தமிழ் மொழியாக்கம் இங்கு தரப்படுகிறது.




இலங்கையில் நிலவும் இனப்பூசலுக்குக் காரணமான மோதலுக்கு பேச்சு மூலம் தீர்வுகாண எந்த ஒரு வாய்ப்பும் இந்த நாட்டில் இதுவரை அமையவில்லையா? என்றொரு கேள்வி எம்முன் உள்ளது. இந்த வினா, அதாவது யுத்தத்துக்கு மூலகாரணியான தமிழ் மக்களது சமூக அரசியல் கலாசார உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய அரசி யல் தீர்வொன்றை முன்வைத்தல் என்பது இன்று முக் கிய கட்டத்தை அடைந்துள்ளது. ஐ.நா. பொதுச் செயலர் பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு என்ற இருதரப்புகள் மீதும் சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் மூலம் இந்தக் கேள்வி மேலும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

வாய்ப்புகள் வீணடிப்பு.
இனப்பிரச்சினைக்குப் பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னரும் இருந்துள்ளன. ஆனால் 2006ஆம் ஆண்டளவில் பேச்சு மூலமான தீர்வொன்றைக் காண்பதற்கான சூழல் இருக்க வில்லையென ஒருவரால் வாதிட முடியும்.ஏனெனில் அந்தக் கால கட்டத்தில் இந்த இரு தரப் புக்களுமே போர் வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தன. 2005ஆம் ஆண்டின் பின்னர் எழுந்த காலகட்டமானது பேச்சு மூலம் அமைதியை ஏற்படுத்தும் வாய்ப்பை நிராகரித்தது. ஏதாவது ஒரு தரப்பு போரில் வெற்றிபெற்ற பின்னர் மட்டுமே அமைதி சாத்தியமாகக்கூடும் என்று, தத்தமது பலத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரனும் மஹிந்த ராஜபக்ஷவும் நம்பினர்.

உண்மையில் அந்தக் காலகட்டத்தில், போர்ப் பலத்தை நம்பாது மனிதாபிமான ரீதியில் பிரச்சி னையை அணுகி அதனைத் தீர்த்துக் கொள்வதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையே இருந்தது. ஆனால் அப்படிச் செய்வது இரு தரப்புகளுக்கும் வேண்டிய தீர்வு ஒன்றைத்தராது என்ற நிலையே இருந்தது. அதுமட்டுமல்லாது அத்தகைய சமாதான முயற்சி பேச்சு மூலமான முயற்சி அதிக காலத்தைக் கோரி நின்றது. அந்த முயற்சியில் வெற்றி பெறுவதற்கு அரசுக்கும் பிரதான எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படுவதும் அவசியமாக இருந் தது. அந்த இணக்கத்தை ஏற்படுத்தக் கிடைத்த இறுதி வாய்ப்பை 2004ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது அதிகார பலத்தின் மூலம் சிதைத்தார். தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இப்படிச் செய்தார்.

ஆனால், இரு தரப்புகளும் அதுபற்றிக் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் போர் வெற்றியின் மீது அவை நம்பிக்கை வைத்திருந்தன. அந்த வெற்றிக்காகச் செலுத்த வேண்டி இருந்த மனித விலை மற்றும் சமுதாய ரீதியான விலை, போரின் மூலம் ஏற் படக்கூடிய நீண்ட கால விளைவுகள் தொடர்பிலான எந்தவொரு ஆதங்கமும் இருதரப்புக்களிடமும் இருக்கவில்லை. இத்தகைய ஒரு பின்புலத்தில் இலங்கையில் அப்போது நடந்த சமாதான முயற்சிகளின் அர்த்தம் பிரதிவாதியை அன்பு, அரவணைப்பு மூலம் வென்றெ டுப்பதாக இருக்கவில்லை. பேச்சு மேசையில் ஒருவரை ஒருவர் எப்படித் தோற்கடிப்பது என்பதாகவே இருந்தது. 2006ஆம் ஆண்டளவில் போர்ப் பலம் என்ற துலாக்கோலில் இலங்கை அரசின் பக்கமே கனதி யானதாக இருந்தது. மனித மற்றும் பௌதிக வளங்கள் என்ற கோணத்திலும் சர்வதேசத் தொடர்பாடல்கள் என்ற கோணத்திலும் கூட மூலோபாய சாதகங்களைக் கொண்டிருந்த இலங்கை அரசு போரில் வெல்லும் என்பது முன்கூட்டியே தெரியத்தக்கதாக இருந்தது.

மஹிந்தவுக்கு ஆர்வமில்லை.
"எமது நாட்டுச் சிப்பாய்கள் ஒரு கரத்தில் சுடுகலன்களையும் மறுகரத்தில் மனித உரிமைகள் சாசனத்தையும் ஏந்தியவாறுதான் போர்க்களம் சென்றனர்'' என்று ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். அதன் உண்மை பொய் பற்றித் தீர்மானிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிடுகிறோம். நானறிந்த வகையில் போர்ப் பூமியில் இருந்த எந்தவொரு ராணுவ முகாமிலும் ஐ.நா. மனித உரிமைகள் சாசனம் உள்ளடங்கிய சுவரொட்டியொன்று கூட காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

போர் முன்னெடுப்புகளைப் பெரிதாகப் பேசுகின்ற, மோசமான போர் வெறியை ஊட்டுகின்ற முழுவதும் இனவாத அரசியல்மயப்பட்ட வாசகங்களையே அந்த முகாம்களில் காண முடிந்திருந்தது. அன்று போரைப் பற்றியோ, மனித உரிமைகளைப் பற்றியோ வாய்திறப்பவர்கள் கொல்லப்பட வேண்டிய துரோகிகளாகவே கருதப்பட்டனர். மறுபுறத்தில் போருக்குச் சமாந்தரமாக தமிழர் பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட பிரிதொரு அரசியல் செயற்பாட்டையும் ராஜபக்ஷ அரசு ஒப்புக்காகவேனும் முன்னெடுத்தது. அது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் பேச்சு.ஆனால் எந்வொரு சந்தர்ப்பத்திலும் "ஒருகரத்தில் அரசியல் தீர்வொன்றையும் கொண்டுதான் நாங்கள் போர்க் களம் சென்றோம்'' என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்ததில்லை. அந்த அனைத்துக் கட்சிப்பேச்சுக்களின் பெறுபேறாகக் கிடைத்த அரசியல் தீர்வு யோசனைகள் போர் முடிவுற்ற கையோடு குப்பைக் கூடைக்குள் போடப்பட்டமையே அதற்குக் காரணம். ராஜபக்ஷ அரசின் யுத்தக் கோட்பாட்டினுள் அதிகாரப் பகிர்வு என்ற எண்ணக்கருவுக்கு எப்போதுமே இடமே இருந்ததில்லை. ஆனாலும் போர் முடிந்து விட்டது என்பதை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கச் சென்றிருந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, அங்கு 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் அரசியல் தீர்வொன்று வழங்கப்படுமெனச் சபதமிட்டார்.

புதுடில்லியில் அவர் அதனைச் சொல்லும் போது அதிகாரம் பகிரப்படுவதை முழு மூச்சில் எதிர்த்த தீவிர தேச பக்தர்கள் பலரும் ராஜபக்ஷ அரசில் இருந்தனர். அவை கடும்போக்கு சிங்கள தேசியவாதத்தைச் சுமந்து நின்றன. மக்கள் ஐக்கிய முன்னணி, ஜாதிகஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி என்பனவே அவையாகும்.இந்த அரசியல் சக்திகள் தற்போதும் மஹிந்த ராஜபக்ஷவுடனேயே இருக்கின்றன. மதம் சார் மற்றும் கருத்தியல் தலைமைத்துவத்தை வழங்கும் குழுவொன் றினால் இந்த அரசியல் கட்சிகளுக்குப் புதிய யோசனை யொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
தூண்டிவிடப்படும் சக்திகள்இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்த பரிந்துரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளதால் அதனுட னான அமைதிப் பேச்சை உடன் நிறுத்த வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே அந்த யோசனையாகும்.

அதை அடியொற்றியே முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பேச்சுக்கான அரச குழுவில் இருந்து விலகினார். உண்மையைக் கூறுவதானால் இவர்களில் எவருமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் தீர்வொன்றுக்குச் சார்பாக நின்றதில்லை. நிபுணர் குழு அறிக்கையை சாதகமானதொரு வாய்ப் பாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களது அரசி யல் அபிலாஷைகளை நசுக்கி விடுவதற்கு இவர்கள் எத்தனிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. இது இவ்வாறிருக்க பான் கீமுனின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நட வடிக்கைக்கும், அரசியல் தீர்வு ஒன்றை வலியுறுத்தும் எவரொருவரும் இணைத்துக் கொள்ளப்படக் கூடாது எனவும் மேற்படி தரப்புக்கள் ஆலோசனை வழங்கியுள்ளன.

மறுபுறத்தில் பான் கீமுனின் அறிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்த போதும், அரசின் பங்காளிகளான கம்யூனிஸ்ட், மற்றும் சமசமாஜக் கட்சிகள், தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைவேற் றப்படும் விதத்தில் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.ஐக்கிய தேசியக் கட்சியும் கூட இன்றைய சந்தர்ப் பத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படுவது அவசியம் என்று கூறுகின்றது.
அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியும் ஐ.நா. அறிக்கையை எதிர்த்துள்ளது. எனினும் இராஜதந்திர வார்த்தைகளில் அது இந்த விடயத்தைக் கையாள்கிறது. ஐ.நா. செயலாளரின் அறிக்கையை அனைவரும் ஓரணியில் நின்று எதிர்க்கத்தக்க வகையிலான ஜன நாயக உரிமைகளை நாட்டில் உறுதிப் படுத்துமாறு அது அரசிடம் வலியுறுத்தி உள்ளது.மறுபுறத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அரச பேச்சுக் குழுவில் இருந்து விலகியதை ஒரு பொருட்டாகக் கருதாது அரசியல் தீர்வொன்றை எட்டும் பேச்சுக்குத் தாம் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கப் போவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அரசிடம் மாற்றுத் திட்டம்
இத்தகைய ஒரு சூழலில் தமிழ்க் கட்சிகளுட னான பேச்சில் இருந்து விலகும்படி சிங்களக் கடும் போக்குவாதச் சத்திகள் முன்வைக்கும் கோரிக் கைகளை நிறைவேற்ற இப்போது அரசு தயாராக இல்லை. பதிலாக மாற்று அணுகுமுறை ஒன்றைக் கையாள்கிறது.புலிகள் ரணில் விக்கிரமசிங்க சமாதானப் பேச் சின் போது உறுப்பினராக இருந்தவரும் அமெரிக்க ஆதரவாளருமான மிலிந்த மொறகொடவை வெளிநாட்டு விவகாரங்கள் சம்பந்தமான ஜனாதி பதி ஆலோசகராக அது நியமித்துள்ளது. அவசர காலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட் டத்தின் சிற்சில விதிகளைத் தளர்த்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாகவும் தகவலறிய முடிந்துள்ளது.ஆனாலும் போரின் மூல காரணியான தமிழ் மக்க ளது சமூக அரசியல் மற்றும் கலாசாரம் சம்பந்தமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் முயற்சி கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. 70 ஆயிரம் மக்கள் வாழும் முல்லைத்தீவு மாவட் டத்தில் பாதுகாப்புக்காக 70 ஆயிரம் இராணுவத் தினர் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று செய்தி யொன்று கூறுகிறது. போர் முடிவுற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க அரசு எந்தளவு தூரம் திறனற்றுப் போயுள்ளது என்பதை அச்செய்தி தெளிவுபடுத்துகிறது.இத்தகைய அரசியல் நிலைப்பாடுகளின் மத்தி யில் தமிழ் மக்களுக்கு உண்மையான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படக்கூடும் என்பதை எண்ணிப் பார்ப்பது கடினம். போர் மனோபாவத்தால் கட்டி எழுப்பப்பட்டுள்ள இலங்கையின் அரசியல் மனோ பாவமானது எப்போதுமே தமிழ் மக்களை அடி மைப்படுத்தி வைத்துக்கொள்ளவே விரும்புகிறது. மாறாக உரிமைகள் வழங்கப்படக் கூடியதொரு சமூகமாக தமிழர்களைத் தெற்கு ஒருபோதும் கருதுவதில்லை.

நீண்ட கால ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்ப டுத்தும் போர் மனோபாவத்தின் ஒரு கோணமே இதுவாகும். இலங்கை அரசிடம் காணப்படும் அடுத்த கோணம் மனித மற்றும் ஜனநாயக உரிமைகளுடனான சமூகம் ஒன்றுக்குப் பதிலாகத் தான்தோன்றித்தனமான நிர்வாகமொன்றே அவசி யப்படுகிறது என்று எண்ணத் தலைப்படுகிறது.
உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்இத்தகைய காரணங்களை முன்னிட்டே யுத்தம் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தமான பேச்சு களும் அழுத்தங்களும் எமக்கு அவசியமாகின்றன. மற்றப்படி, மஹிந்த ராஜபக்ஷவை மின்சார நாற்காலிக்கு அனுப்புவதற்காக அல்ல.

அதாவது, யுத்த மனோ பாவத்திலிருந்து வெளி யேறி அதைக் கைவிட்டு போரின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் மூலகாரணி களுக்குத் தீர்வுகளை வழங்கி, அதற்கு இரையாகிப் போயுள்ளவர்களுக்குச் சரி யான பரிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற் காகவே மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்துகின்றன. போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களைக் கொண் டுள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை அதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்கியுள்ளது. அதிலிருந்து நழுவிச் செல்வதற்கு முயற்சிப்பதானது பிரச்சி னையை நிரந்தரமாக்கிவிடும்.

Tuesday, April 12, 2011

மும்பை சென்ற ஜனாதிபதிக்கு மரியாதை இல்லை

மும்பை சென்ற ஜனாதிபதிக்கு மரியாதை இல்லை:ஒளிப்படம் ஒன்றுகூட எடுப்பதற்கு விடவில்லை

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண மும்பைக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா உரிய மரியாதைகளை வழங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அழையாவிருந்தாளியாக அவர் சென்றதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.


"மும்பை மிரர்" பத்திரிகை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிக்கு உரிய மரியாதைகள் வழங்கப்படாது அவர் புறக்கணிக்கப்பட்டமை குறித்து இலங்கை அதிகாரபூர்வமாக முறையிடாத போதும் அதிகாரிகள் தமது அதிருப்தியை ஊடகவியலாளர்களிடம் வெளிப்படுத்தி உள்ளனர்.
ராஜபக்ஷவுடன் சென்ற பரிவாரங்களுக்கு கேட்டளவு இருக்கைகளை இந்திய அதிகாரிகள் ஒதுக்காது விட்டதும், போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இரு அணியிருக்கும் ஜனாதிபதி அறிமுகம் செய்து வைக்கப்படாமை ஆகியவையே முக்கிய இழிவுபடுத்தல்களாக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட மும்பையிலுள்ள இலங்கைத் துணை தூதுவர் உபேக்ஷா சமரதுங்க,"ஜனாதிபதி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கான இருக்கைகளை வெளிவிவகார அமைச்சே ஒழுங்கு செய்தது. அவர்களுக்கு இன்னும் அதிக ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால் மேலும் மகிழ்ச்சியடைந்திருப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாட்டத்தைக் காண இலங்கைக்கு 40 இருக்கைகளை ஒதுக்கித் தருமாறு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக இந்தியக் கிரிக்கெட் சபைக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் குறுகியகால இடைவெளிக்குள் அதனை ஏற்பாடு செய்ய முடியாது போனதால் 10 இருக்கைகளை மட்டுமே இந்திய அதிகாரிகள் ஒதுக்கினர்."துடுப்பாட்டச்சபைத் தலைவரின் அறையில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் தலா 10 ஆசனங்களை மட்டுமே எம்மால் ஒதுக்க முடிந்தது'' என்று கூறினார் இந்திய துடுப்பாட்டச் சபையின் பிரதான நிர்வாக அதிகாரி ரத்னகார் ரெட்டி.

அதேவேளை, சில வாரங்களுக்கு முன்னரே இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு சார்பில் 40 ஆசனங்களை வாங்கியிருந்தது. அவற்றைப் பயன்படுத்துமாறு இலங்கைப் பரிவாரத்தில் சிலருக்கு அறிவிக்கப்பட்டது.இறுதி ஆட்டம் ஆரம்பமாவதற்குச் சற்று முன்னர் குறைந்தது இலங்கை அணி வீரர்களையாவது சந்திப்பதற்கு ஜனாதிபதி விரும்பினார். அவரது வேண்டுகோளை இந்திய அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். இதனால் சிறிலங்கா அதிபரும் அவரைச் சார்ந்தவர்களும் பெரும் அதிர்ச்சியடைந்ததாக மகாராஷ்டிரா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மொகாலியில் இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக மைதானத்தில் அணி வீரர்களைச் சந்தித்திருந்தனர். போட்டி தொடங்க முன்னர் ஜனாதிபதி அணி வீரர்களைச் சந்திக்க திட்டமிட்டிருந்ததை உறுதி செய்துள்ள மும்பையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் சமரதுங்க, கடைசி நேரத்தில் இந்திய அதிகாரிகள் அந்தத் திட்டத்தை மாற்றி விட்டனர் என்று கூறினார். ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியுடன் ஓர் ஒளிப்படம் எடுக்கும் வாய்ப்புக் கூட மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படவில்லை எனறும் அவர் விசனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, புதுடெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இந்திய அரசினால் மகிந்த ராஜபக்ஷ அழைக்கப்படவில்லை. அவர் தனது விருப்பின் பேரிலேயே இங்கு வந்தார். பாகிஸ்தான் பிரதமர் கிலானி, மொஹாலிக்கு எமது விருந்தினராகவே வந்தார். அதனால் அவருக்கு மைதானத்தில் வீரர்களைச் சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது'' என்று அவர் தெரிவித்தார் என "மும்பை மிரர்" செய்தி வெளியிட்டுள்ளது.