Wednesday, May 21, 2008

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீண்டும் இறங்கியிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆளும் கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாண அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகிய பின்னணியிலேயே முஸ்லிம் காங்கிரஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் சார்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பசீர் சேகுதாவூத் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அரச தரப்பினரும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் வாக்குறுதிகளை மீறிப் பழக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம் அமைச்சர்களின் ஏற்பாட்டில் புதிதாக இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் பதவி எட்டாக்கனியான நிலையில் கிழக்கு மாகாண அமைச்சரவையில் கல்வி மற்றும் காணி விவகாரங்கள் அடங்கிய அமைச்சுப் பதவியை எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு வழங்குமாறும் அதனைத் தொடர்ந்து சுழற்சி முறை அடிப்படையில் முதலமைச்சர் பதவியை வழங்குமாறும் புதிதாக கதை அளக்க ஆரம்பித்துள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியினரின் ஆலோசனைக்கு அமைவாக ஏற்கனவே திட்டமிடப்பட்டதன் பிரகாரம் கல்வி மற்றும் காணி விவகார அமைச்சு பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டது.

பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இந்த அமைச்சுப் பதவி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதால் இதனைப் பெற்றுக்கொள்வது என்பது எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே தென்படுகின்றது.

எனவே இந்த அமைச்சுக் கோரிக்கையுடன் சேர்ந்து மற்றுமொரு அவநம்பிக்கை கோரிக்கையையும் இவர்கள் முன்வைத்துள்ளனர். சுழற்சி முறையிலான முதலமைச்சர் பதவி என்பதே அந்தக் கோரிக்கையாகும்.

சுழற்சி முறையிலான பதவிக்கோரிக்கைக்கு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா எந்தவிதமான தார்மீக அருகதையும் அற்றவர் ஆவார்.

1989 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டுவரை மடடக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் பிரதேச வேட்பாளர்களுக்கு சுழற்சி முறையில் வழங்குவதாகக் கூறி வாக்கு மீறியவர் இந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆவார்.

எனவே சுழற்சி முறையிலான கோரிக்கையை முன்வைப்பதற்கு இவருக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

ஏற்கனவே பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியவர் என்ற அடிப்படையில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை மற்றவர்கள் ஏமாற்றுவதற்கான உரிமையை அவர் ஏற்கனவே வழங்கியுள்ளார். இந்த அடிப்படையிலேயே அவர் தொடர்பான விடயங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

எனவே மக்களை ஏமாற்றும் நோக்கத்துடனேயே இவ்வாறான கோரிக்கைகளை எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முன்வைப்பதாக தெட்டத்தெளிவாகத் தென்படுகின்றது.

முஸ்லிம் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் நோக்கிலேயே இவர்கள் இவ்வாறான விடயங்களைக் கூறிவருகின்றனர். எனவே இவ்வாறான ஏமாற்று வார்த்தைகளை நம்பி முஸ்லிம் மக்கள் மீண்டும் ஒரு தடவை ஏமாந்துவிடக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: